Tuesday 3 April 2007

திருவிழா ஹங்ஓவர்

கோவில் திருவிழாவைப் பற்றி பதிவெழுத நேரும் என்று கனவிலும் நினைத்ததில்லை.திருவிழாவிற்கு் மைனர் மாப்பிள்ளை மாதிரி கச்சேரி கேட்கப் போனதோடு சரி ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
சரி ஒரு நாலு வரியாவது ஏழுதலாம் என்றுதான் ........

*தன்னார்வலர்களுடைய பணி மிகச்சிறப்பாக இருந்து,பார்க்கிங் / சமையல் / அலங்காரம் / ஆலயத் தூய்மை /ஒலி - ஒளி அமைப்பு என அனைத்து வேலைகளும் தத்தம் பாட்டில் நடந்தது யாரும் யாரையும் ஏவிக்கொண்டிருக்கவில்லை.
நன்றி. நீங்கள் நினைத்த காரியம் ஏழு நாட்களுக்குள் நல்லபடி நடக்கும் :-)

*ஒழுங்கமைவு கடைசி இரண்டு நாட்கள் சில சிறிய சிக்கல்களை விடுத்து கச்சிதமாக இருந்தது.மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு பெரிய விசயமாகத்
தெரியாவிட்டாலும் இது இல்லாது போயிருந்தால் பல காரியங்கள் சிக்கலாய் ஆகியிருக்கும்.

*மைக் மோகன் போல தேவையற்ற பேச்சுக்களோ / அறிவிப்புகளோ குறைவு.

*கச்சேரி அருமை ..குறிப்பாக நெரிசல் குறைந்த நாட்களில், தினமும் சிறிது நேரம்தான் என்றாலும் ரம்மியமாக இருந்தது.[என்னளவில் இது தான் திருவிழா
ஹைலைட்]
"சிங்கார வேலனே"
"பழம் நீ அப்பா"
"மருதமலை மாமணியே"
ஆகியன் படித்தமான வாசிப்புகள்.
[கலைஞர்களின் பெயர்களில் சில சந்தேகம் சரிபார்த்துக்கொண்டு பிறகு சேர்த்துவிடுகிறேன்]

*செல் ஏந்தும் காளையரும் சேல் விழிப் பாவையரும் "கண் பேசும் வார்த்தைகள்" நல்ல சுவாரசியம்.பலரும் தமிழில் பேச முயல்வதாய்த் தெரியவில்லை.

*வரிசையில் நிற்பதென்றால் இன்னும் கூட சில அங்கிள்களுக்கும் / ஆன்ரிகளுக்கும் வேம்பாய்க் கசக்கிறது, இடையில் நுழைந்து காரியம் சாதித்து விட்ட திருப்தி என்னதான் மறைத்தாலும் முகத்தில் தெரிந்துவிடுகிறது.

*சைவ மன்றத்தினர் முன்நின்று நடத்திய [or is it நடாத்திய ] விழாவானாலும் அவர்கள் ஒரே ஒரு ஒலித்தட்டு மட்டுமே விற்பனைக்கு வைத்திருந்தனர் [அதிலும் பல சினிமா பாடல்களின் நெடி] ..இன்னும் பல் ஆன்மீகம் / கலை சம்பந்தமான புத்தகங்களை / பொருட்களை வைத்திருக்கலாம்.

*பட்டுப் புடவைகள் பிரமாதம், சரிகைப் பட்டு வேட்டிகளும் கூட இனி அதுகள்
தத்தம் பெட்டிகளிலோ அலமாரிகளிலேயோ ஹைபர்னேட் (தமிழ் ?) செய்யப் போய்விடும் .அடுத்த பண்டிகை வரை.

*படிமுறை [Hierarchy] இருந்தாலும் குழு அரசியல் / power play இருப்பது போல வெளித்தெரியவில்லை ..பாராட்ட வேண்டிய விசயமிது.

*புலம்பெயர்ந்த தமிழர்களின் ,குறிப்பாக ஈழத்தவரின் மிகப் பெரிய சமூக சந்திப்பாக இந்தத் திருவிழா அமைந்துள்ளது,எல்லோருக்கும் யாரையாவது தெரிந்திருக்கிறது.அந்த விதத்தில் இது ஒரு முக்கிய நிகழ்வு.

இசை,இசைவு,
மனம்,மனிதம்,
கடமை,கடவுள் என்று பல தளங்களில் ஒத்திசைகிறது .
--------
பவுர்ணமி நிலவொளியில் காற்றடிக்க
வாழ்க்கைப் புத்தகத்தின்
இன்னுமொரு வசீகரமான
பக்கம்
தானே திறந்து மூடிக்கொண்டது.
---------

update :
கலைஞர்களின் பெயர்கள்
நாதஸ்வரம்
------------------
கலைமாமணி ஸ்வரஞான ரத்தினம் S.S.சிதம்பரநாதன்
நாதஸ்வர இன்னிசை வேந்தன் M.P நாகேந்திரன்

தவில்
------------------
தவில்ஞான குபேரபூபதி T.உதயசங்கர்
லயஞான விபஹார வித்வமணி N.R.S சுதாகரன்.

[இந்த அடைமொழி / பட்டங்களை எப்படித் தேர்வு செய்வார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டுமென்ற அவா நெடுநாளாய் உண்டு .....உட்கார்ந்து யோசிப்பார்களோ]

இவர்களுடைய தனிக் கச்சேரி ஒன்று 8/4/07 அன்று மாலை ஜந்து மணி அளவில் கோவிலின் பின் உள்ள பண்பாட்டு அரங்கில் நடக்க உள்ளது .

9 comments:

செல்லி said...

//*பட்டுப் புடவைகள் பிரமாதம், சரிகைப் பட்டு வேட்டிகளும் கூட இனி அதுகள்
தத்தம் பெட்டிகளிலோ அலமாரிகளிலேயோ ஹைபர்னேட் (தமிழ் ?) செய்யப் போய்விடும் .அடுத்த பண்டிகை வரை.//
என்ன சரியான விவரந்தெரியாத ஆளா இருக்கிறீங்க.
அடுத்த பண்டிகைக்கு, திரிஷா, ஜோதிகா, ஐஸ்வர்யா fashion எல்லாம் போய் புதுசாய் எந்த நடிகையின்ர பேரில சேலை வருதோ என்று காத்துக் கொண்டல்லோ இருக்கிறம்.
இதுக்குச் சாதகமா "புதியன புகுதலும் பழையன கழிதலும் வழுவல்ல வழக்காறு"
அதுபாட்டுக்கு fashion இல புதுசுபுதுசா வரும் பழசெல்லாம் அலுமாரிக்க போகாது charity க்குப் போகும் அதுவும் வேறை எங்கை?

கானா பிரபா said...

நச் என்று சொல்லிவிட்டீர்கள் கார்திக் ;-)

கார்திக்வேலு said...

செல்லி
இதில் இவ்வளவு விசயம் இருக்கு என்று தெரியாமல் போய்விட்டது.:-)
முடிந்தால் இந்த புடவை fashion பத்தி / சுற்றி ஒரு பதிவு போடுங்களேன்.
நாங்கள் இன்னும் கொஞ்சம் விவரமாயிருக்க உதவும்.

நன்றி பிரபா.

துளசி கோபால் said...

கார்த்திக்,

எல்லாம் ஒரு ஷெ(செ)ல்லில் அடக்கிட்டீங்க:-)

அதி சூப்பர்.

செல்லி said...

கார்த்திக்

//அதுபாட்டுக்கு fashion இல புதுசுபுதுசா வரும் பழசெல்லாம் அலுமாரிக்க போகாது charity க்குப் போகும் அதுவும் வேறை எங்கை?///
இங்க நாட்டு நடப்பைத் தான் அப்பிடி எழுதினேனே தவிர எனக்கொன்றும் அந்த சேலை fashion பத்தி தெரியாது.:-)

//முடிந்தால் இந்த புடவை fashion பத்தி / சுற்றி ஒரு பதிவு போடுங்களேன்.
நாங்கள் இன்னும் கொஞ்சம் விவரமாயிருக்க உதவும்.
//ஒரு நாளைக்கு வேணுமென்றால் நான் கோயிலுக்குப் போய் இப்பிடியான பெண்களைப் பேட்டி கண்டு ஒரு பதிவு போடட்டுமா?:-)
ஒரு நாளைக்கு சேலைக் கட்டிவிட்டு charity க்கு அதைப் போடுறதைவிட அந்தச் சேலைக்குரிய காசையே கஷ்டப்படுறவர்களுக்கு கொடுப்பதுதான் என்னோட பொலிஸி.:-).

ஊரில செல்லடிக்கேக்கை துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மரண பயத்தில ஓடினது இன்னும் மனதில இருக்கே:-(.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//செல் ஏந்தும் காளையரும் சேல் விழிப் பாவையரும் "கண் பேசும் வார்த்தைகள்" நல்ல சுவாரசியம்.//

:O))
கண் 'பேசும்' என்று கேள்விப்பட்டிருந்தேன். போன கிழமை (முருகன் தயவில்) ரெண்டு பெரிய கண்கள் காட்டிய ஒரு demo எனக்கு காணக்கிடைத்தது. ;O)

கார்திக்வேலு said...

செல்லி
//ஒரு நாளைக்கு வேணுமென்றால் நான் கோயிலுக்குப் போய் இப்பிடியான பெண்களைப் பேட்டி கண்டு ஒரு பதிவு போடட்டுமா?:-)//
நல்ல யோசனையாத்தான் தெரிகிறது ....படங்களும் இருந்தால் நலம் :-)

//என்னோட பொலிஸி.:-)//
நல்ல பாலிசி

துளசி சொன்ன செல்லும் செல்லி சொன்ன செல்லும் [Shell]
ஒரே வார்த்தை தான் என்றாலும் பொருளில் தான் எவ்வளவு வேறுபாடு.
--------------
கண்கள் என்றதும் நினைவிலிருக்கும் கவிதை ஒன்று

கந்தனைக் காணவென்று
கார்த்திகைக்கு வந்தேனடி
உந்தனைக் கண்டேன் இனி
ஊர் திரும்ப மாட்டேன்

பொன்ஸ்~~Poorna said...

//கோவில் திருவிழாவைப் பற்றி பதிவெழுத நேரும் என்று கனவிலும் நினைத்ததில்லை.//
கார்த்திக், இதைக் கூட கவிதைகள் போலவே சொற்சிக்கனத்தோடு எழுத வேணுமா? :))

படங்கள் ஏதாச்சும்.. ?

செல்லியக்காவையும் அழைத்துப் போயிருந்தால் புடவைகள் பத்தி இன்னும் விரிவாக விவரமாக சொல்லி இருப்பாங்களோ ;)

கார்திக்வேலு said...

பொன்ஸ்,
படிப்பவர் சவுகரியத்தையும் எழுதுபவர் வசதியையும் (?!) கருதியே ...:-)

சொல்ல வேண்டியதைச் சொல்ல சில வரிகள் போதுமாய் இருக்கிறது
சொல்ல நினைத்ததைச் சொல்ல ஆரம்பித்து விட்டால் தான் பத்தி பத்தியாய்
பத்திக்கொள்கிறது

மீண்டும் பூ மீது யானையா :-)