Friday 1 January 2010

NAN TIEN TEMPLE

சிட்னியில் இருந்து சுமார் 100 மைல் தொலைவில் (ஒரு மணி நேர பயணம்)அமைந்திருக்கிறது NAN TIEN பெளத்த கோயில்.பெரும் நிலப்பரப்பில் சிறப்பான பராமரிப்போடு சகல சமயத்தவருக்குமாக ஒவ்வொரு நாளும் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை திறந்திருக்கிறது இக்கோயில்.வாருங்கள் அக் கோயிலுக்குப் பயணிப்போம்.
சிட்னி நகரில் இருந்து கோயிலுக்குப் போகும் பாதை இது.

ஆலயத்துக்கு அருகாக நெருங்கும் போதே பெளத்த கோயிலுக்குக் கோபுரம் போலத் தெரியும் பகோடா(pagoda) கண்ணுக்குத் தெரியத் தொடங்கும்.கிட்ட நெருங்க நெருங்க ஆர்வம் பெருக ஆரம்பிக்கும்.அவ் ஆலயத்துக்குரிய ஆலய முகப்பு இது.

சற்று உள்ளே செல்ல முகப்பில் கருணையும் சாந்தமும் பொலிய அன்போடும் புன் முறுவலோடும் அமர்ந்திருக்கும் புத்தரை தரிசிக்கலாம்.

இது தான் தூரத்திலேயே தெரியத் தொடங்கும் பகோடா.

இது அதன் கிட்டிய தோற்றம்.8 மாடிகளைக் கொண்ட பகோடாவை அடைந்ததும் புத்தரை வழிபட்டு அதன் வலக்கைப் பக்கமாகச் சிறப்பாகப் பராமரிக்கப் படும்; மட்டமாகவும் சீராகவும் வெட்டி விடப்பட்ட மதில் போல வளர்ந்திருக்கும் புல் மதில் சூழ்ந்த படிக்கட்டினால் நடந்து சென்றால் பகோடாவின் பின் புறத்தை அடையலாம். மேல் மாடிகளுக்குச் செல்ல அனுமதி இல்லை.ஆனால் ஒரு சுற்று சுற்றி வரலாம்.பளீச்சென்ற சுத்தமும் அமைதியையும் நீங்கள் எங்கும் காணலாம்.

அவற்றுக்கு அப்பால் உயரமான மேட்டு நிலத்தில் அமைந்திருக்கிறது ஆலய மணி.மேலே உள்ள படம் அதன் தோற்றத்தைக் காட்டுகிறது.மிகப் பெரும் அளவில் அமைந்திருக்கும் இம்மணியை பெரும் மூங்கில் குளாய் போன்ற ஒரு அமைப்பினை உடைய களியினால் அசைத்து மணியில் முட்டச் செய்வதன் மூலம் ஓசை எழுப்பப் படுகிறது.

ஒரு முறை நீங்கள் அதனை மணியில் தட்டச் செய்வதன் மூலம் அதன் உள்ளே கேட்கும் இனிய ரீங்காரத்தை கிட்டத் தட்ட 2, 3 நிமிடங்களுக்கு கேட்கக் கூடியதாக இருக்கிறது. அதன் இனிய ஓசை இந்து, பெளத்த தேவாலயங்களின் மணியோசையிலிருந்து வேறுபட்டதாகவும் இனிய துல்லிய ஓசையை கொண்டதாகவும் இருக்கிறது.

அது வெட்ட வெளி ஒன்றில் அமைந்திருப்பதால் அம்மணியின் ஓசை அவ்வாலயப் பரப்பெங்கும் துல்லியமாகக் கேட்கக் கூடியதாக இருக்கிறது.கீழே உள்ள படம் மணி உள்ள இடத்திலிருந்து ஆலயத்தின் பின் புறத்தைக் காட்டுகிறது.

இது ஆலயத்தின் இன்னொரு கட்டிடம்.

இது அதன் இன்னொரு தோற்றம். மிக அழகும் சுத்தமும் சாந்தமும் சிறப்பான பராமரிப்பும் கொண்ட ஒரு இடம் இது.

இது அதன் அருகாக இருக்கும் அடுத்த கட்டிடம். எல்லா இடத்திலும் புத்தரே பல்வேறு தோற்றங்களில் அமர்ந்திருக்கிறார்.உள்ளே செல்ல அனுமதி எல்லோருக்கும் இருக்கிறது.உள்ளே கட்டிடம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. நடுவில் புத்த பகவானும் இடது கைப்புறம் உள்ள பகுதி தியான மண்டபமாகவும் வலது கைப்பக்கம் உள்ள பகுதி வேண்டுதலை நிறைவேற்றும் இடமாகவும் இருக்கிறது.

இங்கிருக்கிற புத்தர் உருவச் சிலைகள் இலங்கையின் கருணையும் அன்பும் சாந்தமும் கொண்ட புத்த சிலைகளை நினைவூட்டுகின்றன.இப்பெரும் சிலைகளின் பின் புறம் பல ஆயிரக் கணக்கான சிறு சிறு புத்தர் சிலைகள் உள்ளன.எல்லா இடத்திலும் பிரார்த்தனைக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்துக்களின் கோயிலில் நந்தி சிலை இருப்பது போல் சந்தோசம் நிரம்பிய மரத்தில் கடந்தெடுக்கப்பட்ட படுத்திருக்கும் இப்புத்தர் சிலை மிகக் கலை நயத்தோடு முன்னால் இருக்கிறது.

இது அங்கிருந்த அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்த மரத்தில் கலை நுட்பத்தோடு உருவாக்கப் பட்டிருக்கும் இன்னொரு கலைப் படைப்பு.

இது இவ்வாலயத்தின் பின் புறத் தோற்றம்.

இது ஆலயக் கட்டிடம் ஒன்றின் மூலைப் பக்கம். இங்கு இந்த இடத்தில் சிறப்பாக உடனுக்குடன் தயாரித்து வழங்கப்படும் தேநீர் சாலையும் உணவு விடுதியும் இருக்கிறது. எப்போதும் மக்களால் நிரம்பி இருக்கிறது இவ்விடம்.இடப் பற்றாக் குறையும் நீண்ட வரிசையும் எப்போதும் இங்கு இருக்கிறது. ஆனாலும் பணிவோடும் புன் முறுவலோடும் பொறுமையோடும் வேலை செய்யும் பெளத்த இளம் பெண்கள் மிக அழகாக வருபவர்களை உபசரிக்கிறார்கள்.சீன மக்களின் உபசரிப்புப் பண்பையும் பணிவையும் இங்கு காணலாம்.

உள்ளும் வெளியிலுமாக ஆசனங்கள் போடப் பட்டிருக்கின்றன. உட் புறம் இயற்கையான வகையில் மரங்களால் பொழியப்பட்ட சாதனங்களால் எளிமையாக அலங்கரிக்கப் பட்டிருக்கிறது.சீனக் கட்டிடக் கலையின் வனப்பையும் இங்கு காணலாம்.அவர்களின் கட்டிடக் கலையின் சிறப்பம்சம் கூரையின் மூலைப் பக்கம் சற்று உயர்வான தன்மையைக் கொண்டிருப்பதாகும். இங்கும் அதன் அழகைக் காணலாம்.


தாமரைக் குளமும் மூங்கில் காடும் நிழல் தரு மரங்களும் கருங்கல் இருக்கைகளும் சீமேந்தால் செய்யப்பட்ட மிகத் திருத்தமான முக அமைப்பைக் கொண்ட சிலைகளும் உள்ள இவ்விடத்தில் விரிவுரை மட்டபம், தியான மண்டபம், நூலகம்,அருங்காட்சியகம்,தங்கும் விடுதி,கேட்போர் கூடம்,உணவுக்கூடம், விற்பனை நிலையம், வரவேற்புக் கூடம் என்று சகல வசதிகளும் ரம்மியமும் நிரம்பிய இடமாக இக்கோயில் அமைந்திருக்கிறது.

சென்ற வருட முற்பகுதியில் நான் சென்றிருந்த போது அங்கிருந்த கல்வி நிலையத்தில் ஒரு சீன பெளத்தரின் புகைப்படக் கண்காட்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது."மனிதம்" என்ற தலைப்பில் அவரது வாழ் நாள் சேகரிப்புகள் மிகக் கலைத்துவத்தோடு பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.சகல இன மக்களிடமும் மிக அபூர்வமாக வெளிப்படும் மனிதத் தன்மையை அந்த மனிதர் தன் கமராவுக்குள் சிக்க வைத்திருந்தார். குறிப்பாக ஈழத்து ஏழைத் தமிழ் தந்தை ஒருவர் ஒரு காலை இழந்த தோற்றத்தோடு நிற்க அந்த முடமான காலை உரிமையோடும் பாசத்தோடும் ஒரு விதமான பெருமையோடும் பற்றியபடி நின்ற ஒரு சிறுவனின் உணர்வுகளை அம்மனிதர் கமராவுக்குள் சிறைப்படுத்தி இருந்த விதம் மறக்க முடியாததாக இப்போதும் இருக்கிறது.

என் தோழி ஒருவர் போன போது ஒரு இசை நிகழ்ச்சி நடை பெற்றதாகக் கூறினார்.இயற்கை, ரம்மியம், அமைதி, கலைத்துவம் இவற்றைக் காண, ரசிக்க விரும்புபவர்கள் அவர்களின் இணையப் பக்கத்தை ஒரு முறை பார்த்து விட்டுப் போனால் மேலும் பயன் பெறலாம்.

தெய்வீக வாசனையும் அமைதியும் தவளும் இவ்விடம் ரம்யமான சூழலால் மேலும் மெருகு பெறுகிறது. சுத்தமும் சிறப்பான பராமரிப்பும் மலைப்பாங்கான சூழைலில் அதன் அமைவிடமும் மேலும் அந்த இடத்துக்கு தெய்வீக அம்சத்தைத் தருகின்றன.

சிட்னியின் அவசர வாழ்க்கையில் சிக்கிக் கொண்டவர்கள் சலசலப்பையும் சத்தத்தையும் சற்றே தவிர்க்க விரும்புபவர்கள் அமைதியாக எங்கேனும் ஒரு நாளில் சென்று வர இக் கோயில் நல்ல இடம்.

ஆலய முகவரி;
Bekeley Road,
Berkeley,
N.S.W.2506. தொலைபேசி இலக்கம்;42720600

email; info@nantien.org.au
web; www.nantien.com

2 comments:

கானா பிரபா said...

விரிவான விளக்கங்களுடன் அழகான படங்களுடன் அருமையான பதிவு

hayyram said...

superphotos thanks

regards
ram

www.hayyram.blogspot.com