Friday 16 February 2007

கங்காரு என்கிற நான்


எம்மையும் எமது நாட்டின் அற்புதங்களையும், அறிய ஆவலாயிருக்கும் இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எமது முதற்கண் வணக்கங்கள்.

கங்காரு என்றால் "எனக்குத் தெரியாது" என்று எமது நாட்டின் மூத்த குடியினத்தவரின் மொழியில் அர்த்தம் என்று பரவலாக பேசப் பட்டு வருகிறது. உண்மை என்ன என்று அனைவருக்கும் விளக்கவே உங்கள் முன் தாவி வந்துள்ளேன்.

எமது நாட்டு மக்களால் பேசப்பட்ட கூகு யிமிதிர் மொழியில் "கங்குரூ" என்று அழைக்கப்பட்ட யாம், இங்கு வந்து ஆக்கிரமித்த ஆங்கிலேயரின் வாயில் மிதிபட்டு, அடிபட்டு கங்காருவாக அறிந்து கொ(ல்)ள்ளப்பட்டோம். எமது இப்பெயர் சூட்டும் விழா, 4.7.1770-ல் லெஃப்டினன்ட் ஜேம்ஸ் குக் அவர்களால் நடாத்தப்பட்டது.

எம்மினத்தின் சாம்பல் நிறத்தினரை மட்டுமே கங்குரூ என்று எமது பழங்குடியினர் அழைத்து வந்தனர். ஆனால் ஆங்கில மொழியில் எம்மினத்தின் அனைவரையும், மற்றும் எமது பங்காளிகள் வல்லபிகளையும் கங்காரூ என்று அழைப்பதாக செவிவழிச்செய்தி.

எம்மினத்தின் ஆண்களை bucks, boomers or jacks என்றும், பெண்களை does, flyers or jills என்றும், எங்கள் இளஞ்செல்வங்களை joeys என்றும் இன்றைய எமது நாட்டவர் தமது ஏடுகளில் எழுதி வைத்துள்ளனர். அன்று யாம் கூட்டம் அமைத்தபோது mob, troop or court of Kangaroos என்று மறுநாள் செய்தியில் வாசித்ததாக எங்கள் கடைக்குட்டி சொன்னான்.

எங்களை செல்லமாக "ரூஸ்" என்றும் அழைப்பர். உலகக் கால்பந்தாட்ட போட்டியில் எமது நாட்டு அணியினர் தம்மை "ஸாக்கரூஸ்" என்று அறிவித்து எமது புகழை ஜகமறிய செய்துவிட்டனர்.

அவர்களுக்கும், வாய்ப்பளித்த உமக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து விடை பெறுகிறேன்.

வணக்கம்

ஆஸீ, ஆஸீ, ஆஸீ.... ஓய், ஓய், ஓய்

3 comments:

துளசி கோபால் said...

ஆஹா......... இப்படித்'தாவி'வந்து சரித்திரம் சொன்னதுக்கு நான் பறந்து வந்து
நன்றி சொல்ல முடியாமக் கிடக்கேன்.
'பக்கத்தூட்டு கங்ரூஸ்' எல்லாம் நல்லா இருங்கப்பா.

ஆனாக் கவனமா இருங்க. எங்கூர்லேயே உங்க 'கறி' விக்கறாங்க:-)))

இப்படிக்கு,
கிவிப் பறவை(?)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

கிவிப்பறவை - எங்க இறைச்சி தின்ன உங்கூர்க்கு தாவவே தேவையில்ல. இங்கேயே எங்க இறைச்சியை விக்கிறாங்கப்பா. :O(

-இன்னொரு கங்காரு

கஸ்தூரிப்பெண் said...

அப்பாடி, வசிஷ்டர் கையால குட்டு பட்டாச்சு!
//ஆனாக் கவனமா இருங்க. எங்கூர்லேயே உங்க 'கறி' விக்கறாங்க:-)))//
அக்காவ், எங்க ஊருலே கார்த்திக் சொன்ன outback-க்கு போனா காருக்கடியில நிறைய வீட்டுல சொல்லிட்டு வந்து உயிர போக்கிக்கும். இப்படி வரத பார்த்தா, கார மெதுவாகவோ, நிறுத்தவோ கூடாதுன்னு அங்கங்கே அறிவிப்பு பலகை வேற!!! ஹ்ம், நாட்டுல எதுவுமே அதிகமா இருந்து மதிப்பில்லைதான்!!!!